மாணவர்களிடையே தகராறு: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறை தடுக்கக் கோரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம்;
பள்ளி நேரத்திலேயே வெளியே சுற்றித் திரியும் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது அடிக்கடி நடப்பதாக அவர்கள் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனிடம் புகார் கூறினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் அரசு மேல்நிலை பள்ளியில், மழையூர், வடவணக்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 685 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாலை பள்ளி முடிந்தவுடன் வெளியே சென்ற மாணவர்களில் சிலர் இருபிரிவாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடவணக்கம்பாடி போலீசார் மாணவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகம் தவறியதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி நேரத்திலேயே வெளியே சுற்றித் திரியும் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது அடிக்கடி நடப்பதாக அவர்கள் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனிடம் புகார் கூறினர்.
மேலும் கழிவறை சுவர்களில் ஆபாச வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதை அழிக்கும்படி அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.