மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து: வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் காயம்

வந்தவாசி அருகே வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Update: 2022-05-16 06:49 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஆரணி செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இந்த வழியில் தெள்ளூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சிறுபாலத்தின் அருகே உள்ள வேகத்தடையில் நேற்றிரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அவரது மோட்டார் சைக்கிளில் வீச்சரிவாள், கஞ்சா பாக்கெட் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த வாலிபரை மீட்டு வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் பின்னர் அந்த வாலிபரை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் இருந்த டிரைவிங் லைசென்சில் அவர், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த ராஜ கோபால் மகன் பிரபாகரன் (வயது 26) என தெரியவந்தது. 

விபத்தில் சிக்கிய இடத்தில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த பைக், வீச்சரிவாள், கஞ்சா பொட்டலம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு வந்தவாசி போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செங்கல்பட்டு மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில், மேல்மருவத்தூர். செய்யூர், விழுப்புரம் போலீஸ் நிலையங்களில் இவர் மீது கஞ்சா, வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விழுப்புரம். செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செங்கல்பட்டு அரசு மருத் துவமனையில் உள்ள பிரபாகரனிடம் விசாரணை செய்து வருகின்றனர். வந்தவாசி பகுதியில் இந்த வாலிபர் குற்றங்களில் ஈடுபட வந்தாரா? என வந்தவாசி போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News