வந்தவாசியில் டாக்டர் அப்துல் கலாமின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

வந்தவாசியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் அப்துல் கலாம் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முப்பெரும் விழா

Update: 2021-07-26 13:52 GMT

வந்தவாசியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் அப்துல் கலாம் 6 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 101 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு, கவியரங்கம் மற்றும் கொரோனா சூழலில் சேவையாற்றிய தன்னார்வலர்களுக்கு 'கலாம் ரத்னா' விருது வழங்கும் நிகழ்வு என முப்பெரும் விழா கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன் தலைமை வகித்தார். ஹோமியோபதி மருத்துவர் அ. சரவணன், இரயில்வே பாதுகாவலர் சு. தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் அவர்கள் பங்கேற்று, அப்துல் கலாமின் வாழ்க்கை செயல்பாடுகளை விவரித்து கூறினார்.

மேலும் கொரோனா சூழலில் சேவையாற்றிய தன்னார்வலர்களுக்கு 'கலாம் ரத்னா' விருதுகள் வழங்கி பாராட்டினார். மேலும் இந்த நிகழ்வில் 'ஆகலாம் கலாம்' என்ற தலைப்பில் பையூர் ஊ.ஒ.ந.பள்ளி தலைமை ஆசிரியை இரா. தேன்மொழி, சென்னாவரம் சமூக ஆர்வலர் ஏ.எல்.எஸ். சுரேஷ், கவிதாயினி. ஷமீமா ஆகியோர் கவிதை வாசித்தனர்.

மேலும் கொரோனா சூழலில் வந்தவாசி பகுதியில் சேவையாற்றிய அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு நிறுவனர் ஷா. அசாருதீன், கற்க கசடற கல்விக் குழு நிறுவனர் இரா. பாஸ்கரன், கலாம் டிரீம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ் ஆகியோர் விருதுகளை பெற்றனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிவேல், சமூக ஆர்வலர்கள் பையூர் விஜயகுமார், கதிர்பாஷா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் அப்துல் கலாம் வேடமிட்டு பேச்சு போட்டிகளில் பங்கேற்றனர். நிகழ்வை எக்ஸ்னோரா செயலாளர் கு. சதானந்தன் தொகுத்தளித்தார். இறுதியில் முதுகலை ஆசிரியர் எ. ராஜ் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News