வந்தவாசி அருகே ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பிகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்

Update: 2021-09-15 08:20 GMT

எலெக்ட்ரிக்  கேபிள் மாதிரி படம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ளது விழுதுபட்டு கிராமம். இந்த கிராமத்துக்கு எஸ்.எஸ் 2. வழூர் மின்மாற்றி வழியாக விவசாயிகள் பயன்பெறும் வகையில், மின்பகிர்மான கழகத்திற்கு சொந்தமான தாழ்வழுத்த மின் பாதை உள்ளது.

இந்த மின் பாதையில் 1 கி.மீ, தூரம் வரை செல்லும் ரூ 45 ஆயிரம் மதிப்புள்ள மின் கம்பிகள் மர்ம நபர்களால் வெட்டி எடுத்து திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒரு மின்சார கம்பத்தை சாய்த்து மின் கம்பியை வெட்டியுள்ளனர். பின்பு அதைத்தொடர்ந்து 6 கம்பங்களில் உள்ள மின்கம்பிகளை துண்டித்து திருடியுள்ளனர்.

இந்த பாதையில் செல்லும் மின் கம்பிகளில் இணைப்பு பெற்று மின்சாரத்தை பயன்படுத்தும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை நிலங்களுக்கு நீர் இறைக்க முடியாமல், பயிரிட்டுள்ள கம்பு, வாழை, மணிலா போன்ற பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News