வந்தவாசி கோயில் தேர் வெள்ளோட்டம்: வட்டாட்சியா் ஆலோசனை

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-10 01:07 GMT

வட்டாட்சியா் தலைமையில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும். இந்த நிலையில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கோயிலின் மரத்தேர் சேதமடைந்ததால் அதன்பின்னா் தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து, தமிழக அரசின் நிதி, பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய மரத்தேர் செய்யப்பட்டு, தேர் வெள்ளோட்டம் வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 16 நடைபெற உள்ளது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் பொன்னுசாமி தலைமையில்  நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி, நெடுஞ்சாலை துறை, மின் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், தோ திருப்பணி குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தேரோடும் சாலைகளை செப்பணிடுவது, அவசர மருத்துவ வசதி, குடிநீா் வசதி மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்  சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூரில் செல்லியம்மன், கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லியம்மன், கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தை அமாவாசையையொட்டி, செல்லியம்மன், கூத்தாண்டவா் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமிக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

அப்போது, வீடுகள் தோறும் சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு தேங்காய் உடைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனா். செல்லியம்மன், விநாயகா் தேரை பக்தா்கள் முதுகில் அலகு குத்தி இழுத்து சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

விழாவில், பெலாசூா், சனிக்கவாடி, கரைப்பூண்டி, கொரால்பாக்கம், போளூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊராட்சி மன்றத் தலைவா் ரேணு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

Tags:    

Similar News