வந்தவாசி அருகே டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவன் படுகாயம்

வந்தவாசி அருகே டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-07-31 01:14 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமம் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.

இந்த நிலையில் டிரைவர் மனோஜ் என்பவர் பள்ளியின் டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.  அப்போது வந்தவாசி வீராசாமி முதலி தெருவை சேர்ந்த சலிம்பாஷா என்பவரின் மகன் தவுக்கீர் என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வேகமாக ஓடி வந்து டிராக்டரில் ஏற முயன்றார்.

அப்போது மாணவன் மீது டிராக்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவனை உடனடியாக அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோரின் தலைமையில் பள்ளி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வந்தவாசியில் முகாமிட்டுள்ளார்.இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News