பிறந்தநாளன்று ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
தூசி கிராமத்தில் நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:
தூசி கிராமத்தில் நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தூசி கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி கீதா இவர்களுக்கு இளமாறன் (வயது8), என்ற மகனும் ரித்திகா (6) என்ற மகளும் இருந்தனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.
இளமாறனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் மாலை பள்ளியிலிருந்து வந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டு தனது பெற்றோரிடம் பிறந்தநாள் கேக் வாங்கி வரும்படி கூறியுள்ளார். பின்னர் வீட்டிலிருந்து சக மாணவர்களோடு விளையாடுவதற்காக வெளியில் சென்றார். நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்றிரவு தூசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தூசியில் குளம் மற்றும் சித்தேரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தேரியில் காணாமல் போன சிறுவன் இளமாறன் பிணமாக மீட்கப்பட்டார். சிறுவனின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பிறந்த நாளில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாள் கேக் வாங்கி வரச்சொல்லிவிட்டு விளையாட சென்ற இளமாறன் ஏரியில் மூழ்கி இறந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கண்கலங்க வைத்தது.
தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு:
வேட்டவலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சி மாருதி நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி தேவி வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இந்த நிலையில் முருகன், தேவி மற்றும் மகன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
தரிசனம் செய்துவிட்டு அதிகாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து முருகன் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.