ஆவணியபுரம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் தேர் திருவிழா

ஆவணியபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-10-11 01:00 GMT

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் தேர் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த ஆவணியபுரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தை ஸ்ரீ தட்சண அகோபிலம் என்றும் அழைப்பர். திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா போன்று இந்த திருத்தலத்திலும் பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி, இருவேளையும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய விழாக்களான 8-ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், 9-ஆம் தேதி ,இரவு கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அதிகாலை மூலவா் சீனுவாசப் பெருமாளுக்கு,ஸ்ரீதேவி பூதேவி ,அரங்கநாதர் ,ஆண்டாள் நாச்சியார் ,ஆழ்வார்கள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெரிய மரத்தேரில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். தோ் மாட வீதிகள் வழியாக வளம் வந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

விழாவில் ஆரணி, போளூர் வருவாய் வட்டாட்சியர்கள் ,  ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உறுப்பினர்கள், கோயில் செயல் சரண்யா, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குமார், பூங்காவனம், மாலதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறையினா் , உபயதாரா்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை12-ஆம் தேதி காலை தீா்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறுகிறது.

Tags:    

Similar News