செய்யாறு, வந்தவாசி நகராட்சியில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் துவக்கம்
செய்யாறு வந்தவாசி நகராட்சியில் 4 இடங்களில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டது.;
பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையத்தினை தொடங்கி வைத்த செய்யாறு நகர மன்ற தலைவர் மோகனவேல்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வந்தவாசி நகராட்சியில் 4 இடங்களில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்களிடம் உள்ள பயனற்ற பொருட்களை குறைத்தல், மறு பயன்பாடு, மற்றும் மறு சுழற்சி என்ற அடிப்படையில் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள் மற்றும் பயன்படாத காலணிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி வளாகம், நந்தீஸ்வரர் கோயில் அருகில், பஸ் நிலையம், வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் ஆகிய 4 இடங்களில் பயனற்ற பொருட்களை வாங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தினை நகர மன்ற தலைவர் மோகனவேல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் விஸ்வநாதன், மணிவண்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் பயனற்ற பொருட்களை பெற 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி நகராட்சி சார்பில் பயனற்ற பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற நகரில் 10 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி அன்றுவரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பயனற்ற துணிகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு பொருட்களை இந்த மையங்களில் வழங்கலாம்.
மையங்களுக்கு நேரில் வந்து வழங்க முடியாதவர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கொடுத்து அனுப்பலாம். இந்த பயனற்ற பொருட்கள் நகராட்சி மூலம் மறுசுழற்சி செய்யப்படும்.
இதையொட்டி வந்தவாசி வீராசாமி முதலி தெருவில் பயனற்ற பொருட்களை பொது மக்களிடமிருந்து பெறும் பணியை வந்தவாசி நகரமன்றத் தலைவர் ஜலால் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.ராமலிங்கம், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பழனி, நகரமன்ற உறுப்பினர் சரவணகுமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.