திருவண்ணாமலை நகர் மன்ற கூட்டம்: அதிமுக திமுக உறுப்பினர்கள் காரசார விவாதம்

நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதில்லை என குற்றம்சாட்டினர்

Update: 2023-03-28 03:12 GMT

திருவண்ணாமலை  நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில்  விவாதத்தில் ஈடுபட்ட திமுக  அதிமுக உறுப்பினர்கள்

திருவண்ணாமலை நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது . துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார் . ஆணையாளர் முருகேசன் உட்பட நகர மன்ற அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் திமுக அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நகர மன்ற கூட்டம் தொடங்கியதுமே அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேசுகையில், பல பகுதிகளில் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய் சாலை, குடிநீர் மின்மோட்டார்கள் பழுதடைந்ததை சரி செய்யவில்லை. நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதில்லை என்று கூறினர்.

அப்போது திமுக உறுப்பினர்கள் சிலர் எழுந்து எங்களுடைய வார்டுகளை பற்றி அதிமுக உறுப்பினர் பேச வேண்டிய அவசியம் இல்லை அவர்களுடைய வார்டு பற்றி மட்டும் பேசட்டும் என்று குறுக்கீடு செய்தனர்.அதிமுக நகர மன்ற உறுப்பினர் பழனி பேசுகையில் தான் 39 வார்டுகளுக்கும் சேர்த்து பேசுவதாக கூறியதை திமுக உறுப்பினர்கள் ஏற்கவில்லை அதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் எழுந்தது,

பின்னர் நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் கூறுகையில், 39 வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டுகளில் எந்த குறைகள் இருந்தாலும் உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மற்றும் கால்வாய் பணிகள் தரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

நகர மன்ற தலைவர் பேசியதைத் தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடைபெற தொடங்கியது.நகர மன்ற பணியாளர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை நகர மன்ற உறுப்பினர்கள் கூறினர்.அப்போது பேசிய நகராட்சி ஆணையாளர், மன்றத்தில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்களுக்கு ஏற்ப நகராட்சி ஊழியர்கள் செயல்பட வேண்டும், அப்படி செயல்படாதவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து வார்டு உறுப்பினர் தாங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் உள்ள காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல் தளத்தில் 121 பூக்கடைகளும் என 249 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.30 கோடியே 10 லட்சத்தில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை அனுப்புவது என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News