அண்ணாமலையார் கோவிலில் இன்று இரவு மன்மத தகன நிகழ்ச்சி

சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அண்ணாமலையார் கோவிலில் மன்மத தகன நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற உள்ளது

Update: 2024-04-23 00:42 GMT

மகிழ மரம் அருகில் எழுந்தருளிய அண்ணாமலையார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி இன்று இரவு அண்ணாமலையார் கோவிலில் மன்மதகன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

அந்த வகையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும்.

அந்த வகையில் சித்திரை வசந்த உற்ச விழாவிற்கான பந்த கால் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்பு 14 ஆம் தேதி அன்று தொடங்கிய வசந்த உற்சவ விழா இன்று 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று நிறைவடைய உள்ளது.

வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு விழாவின் 9 ம் நாளான நேற்று இரவு அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள மகிழ மரத்தை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகே உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவத்தின் பத்தாவது நாளான இன்று 23 ஆம் தேதி அன்று ஐயங்குள தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி, மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

மன்மதனை எரித்த மகேசன்:

இதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்குள் வந்த அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் தங்கக் கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளுவார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் ஆழ்ந்த தியானத்தில் சென்று விடுவார். அப்போது உலகம் முழுக்க உள்ள அனைத்து ஜீவராசிகளும் சிருஷ்டி அடையும் விதமாக மன்மதன் அண்ணாமலையார் மீது பானம் தொடுத்த நேரத்தில் அண்ணாமலையார் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழிப்பார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று அழைப்பர். இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை, கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்படும்

இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானதும். அங்கிருப்பவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து செல்வார்கள் 

Tags:    

Similar News