பருவதமலை குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

பருவதமலைக்கு வந்த சென்னை வாலிபர் குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-07 07:21 GMT

பைல் படம்.

சென்னை ஆவடி, லட்சுமி நகர், கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் என்பவரின் மகன் குணா (வயது 19), பழ வியாபாரி.  இவர் 10 நண்பர்களுடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பருவதமலை மீது உள்ள மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை வந்துள்ளனர்.

மலை ஏறும் வழியில் செல்லும்போது மாரியம்மன் கோவிலுக்கு பின்புறத்தில் உள்ள பெரிய குளத்தில் தண்ணீர் நிறைந்து உள்ளதை பார்த்த அவர்கள் குளத்தில் இறங்கி குளிக்கலாம் என்று முடிவு செய்தனர். பின்னர் குணா உள்பட 10 நண்பர்களும் குளத்தில் இறங்கி வெயிலுக்கு இதமாக குளிக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களுக்கிடையே தண்ணீரில் நீந்தும் போட்டி வைத்து விளையாடி உள்ளனர்.   தொடர்ந்து விளையாடியதால் குணாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென குளத்தின் நடுவில் தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த நண்பர்கள் உடனடியாக குணாவை தேடினர்.

ஆனால் அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் கூறினர். இதுகுறித்த தகவல் அறிந்த போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், கடலாடி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் குணாவை பிணமாக மீட்டனர்.  இச்சம்பவம் குணாவின் நண்பர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குணாவின் பெற்றோருக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் கதறி அழுதனர். பின்னர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News