திருவண்ணாமலை அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

திருவண்ணாமலை அருகே, ரூ.3 லட்சம் பணத்துக்காக மனைவியை எரித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-07 12:30 GMT

கொலை செய்யப்பட்ட கவுதமி

திருவண்ணாமலை அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் ராஜா (வயது 32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவுதமி (28) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கவுதமியின் தாய், தனது மகள் கஷ்டப்படக்கூடாது என்று வெளிநாட்டில் வேலை பார்த்ததில் கிடைத்த ரூ.3 லட்சத்தை கவுதமிக்கு அனுப்பியுள்ளார்.

இதையறிந்த ராஜா,  ரூ.3 லட்சத்தையும் தன்னிடமே தர வேண்டும் என்று கேட்டுள்ளார். கவுதமி மறுக்கவே, இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. பின்னர் வெளியில் சென்ற கவுதமி,  வீடு திரும்பவில்லை.  குடும்பத்  தகராறு காரணமாக, மனைவி  மாயமாகி விட்டதாக,  கணவர் ராஜா தெரிவித்தார்.

இதனிடையே, மாயமான கவுதமி கரும்புத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கவுதமி உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவியை எரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News