மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு

Dam News -கனமழை காரணமாக கலசபாக்கம் அருகே உள்ள மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால் அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2022-10-10 01:36 GMT

மிருகண்ட அணை

Dam News -திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் உயரம் 23 அடியாாகும். இந்த அணை 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 87.23 மில்லியன் கன அடி

வடகிழக்கு பருவமழை காரணமாக கலசபாக்கம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் ஜவ்வாதுமலையில் பெய்த கனமழையின் காரணமாக செங்கம் குப்பநத்தம் அணை, கலசபாக்கம் மிருகண்டா அணை என இரண்டு அணைகளும் நிரம்பி வருகின்றன.

கனமழை காரணமாக மிருகண்டா அணையின் தற்போதைய நீர்மட்டம் 20 அடிக்கு மேல் உள்ளது. அணைக்கு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கும் காரணத்தால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு சுமார் 100 கன அடி தண்ணீர் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் செய்யாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கரையோரம் உள்ள மக்கள் யாரும் ஆற்றுப்பக்கம் வர வேண்டாம் என்றும் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும் கால்நடைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மேலும், தற்போது திறக்கப்பட்ட உபரி நீர் காரணமாக இந்த பகுதியில் கேட்டவரம்பாளையம், சீனநந்தல், காந்தப்பாளையம், சிறுவள்ளூர், ஆதமங்கலம்புதூர், எலத்தூர், எர்ணாமங்கலம், சேங்கபுத்தேரி உள்ளிட்ட 17 ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும் இந்த நீர் பாசனத்திற்கும் பயன்படுவதால் 119.16 டன் உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல்,

அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள்து. சுமார் 9,886 கிணறுகளில் நீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. அதனால், சுமார் 14,606 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அணையின் அருகே உள்ள சிறுவள்ளூர், எர்ணாமங்கலம், அருணகிரிமங்கலம் உள்பட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அணையின் கால்வாய் பகுதியின் அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை முதல் காலை வரை அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 39 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் ஆரணியில் 3.40 மிமீ, செங்கத்தில் 11.40 மிமீ, வந்தவாசியில் 3 மிமீ, போளூரில் 10.20 மிமீ திருவண்ணாமலையில் 2 மிமீ, சேத்துப்பட்டு 4 மிமீ , வெம்பாக்கத்தில் 12 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News