தன் வினை தன்னை சுடும்: கொல்ல வந்தவர் மீதே மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல வந்தவரும், காப்பாற்ற வந்தவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்

Update: 2022-03-09 06:25 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சொரகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ். சரண்ராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேணுகோபால் என்பவருக்கும் வயலில் மாடு மேய்ப்பது தொடர்பான தகராறு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.   

பல மாதங்களாக மாடு மேய்ப்பதில் தகராறு இருந்த நிலையில் நேற்றிரவு சரண்ராஜ் அவருடைய நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் இருக்கும் இரும்பு கட்டிலில் படுத்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ரேணுகோபால் முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சிக் கொல்ல முயன்றுள்ளார்.

மின்சாரம் பாய்ந்ததில் சரண்ராஜ் சத்தம் போடவே, அப்பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவர் அங்கு சென்றுள்ளார். அங்கு ரேணுகோபால் மின்சார வயருடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்த ஏழுமலை, அவரை கீழே தள்ள முயன்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராவிதமாக ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதனையடுத்து நேற்றிரவு சரண்ராஜ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் காவல்துறையினர் ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகிய இருவரின் சடலங்களையும் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

Similar News