திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-10 13:28 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே வீரளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இவருடைய மகன் தனுஷ் (வயது 16), மகள் ஆர்.சந்தியா (13). சந்தியா பெங்களூருவில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வீரளூர் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக ரவிசங்கர் குடும்பத்துடன் வந்தார். மேல்சோழங்குப்பம் பகுதியில் உள்ள  மிருகண்டா அணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தற்போது அணையின் நீர் மட்டம் 18 அடியாக உயர்ந்துள்ளது.

இதனை வேடிக்கை பார்ப்பதற்காக வீரளூர் கிராமம் அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சூர்யா (18), கவியரசன் (21), தனுசு ஆர்.சந்தியா மற்றும் குமாரின் மகள்கள் விந்தியா (16), சந்தியா (17) ஆகிய 6 பேரும் சென்றனர்.

அங்கு சூர்யா, கவியரசன், தனுசு ஆகிய 3 பேரும் அணையின் சிறிய மதகு பக்கமாக உள்புறத்தில் உள்ள தண்ணீரில் குதித்து நீச்சலடித்து விளையாடி உள்ளனர். இதனை சந்தியா விந்தியா, கே.சந்தியா ஆகிய 3 பேரும் அணையின் மேல் உள்ள கல்லில் அமர்ந்து வேடிக்கை  பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது கல்லில் இருந்த பாசி எதிர்பாராதவிதமாக வழுக்கி விட்டதால் 3 பெண்களும் அணையில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்தனர். உடனடியாக கவியரசன் விந்தியா, கே.சந்தியா இருவரை மீட்டு வெளியே கொண்டு வந்தார். ஆனால் ஆர்.சந்தியா அணையில் ஏற்பட்ட அலையின் மூலம் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார்.  இதனால் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் மற்றும் போளூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய ஆர்.சந்தியாவை பிணமாக மீட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News