குடும்ப தகராறில் பெண் கொலை உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவி கொலை செய்யப்பட்டாா். கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-12 11:06 GMT

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி கொலை செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52), போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி உள்ளன. ஒரு மகன் மனநிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனா். இந்த நிலையில், தனிக் குடித்தனம் செல்வது தொடா்பாக, ஜெயந்திக்கு மகன், மருமகளுடன் சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இதனால் முருகன், ஜெயந்தி இருவரும், மகன், மருமகளுக்கு சொந்த வீட்டை விட்டுக் கொடுத்துவிட்டு அதே ஊரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில் முருகன் மகனுடன் சொந்த வீட்டில் சேர்ந்து வசிப்பதற்காக மனைவி ஜெயந்தியை அழைத்ததாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகாலையில் முருகனுக்கும், ஜெயந்திக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்குச் சென்று சரணடைந்தாா் .

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சரணடைந்த முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் குங்குலியர் தெருவை சேர்ந்தவர் கன்ராயன் என்கிற சந்தோஷ் (வயது 25). இவர், அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (20) என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 6 மாதத்தில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கன்ராயன், செய்யாறு தாலுகா பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் கன்ராயனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் விரக்தியில் இருந்த பரமேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு வழக்குப்பதிவு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட பரமேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி , மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News