விபத்தில் இறந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

கலசபாக்கம் அருகே நிவாரண உதவி கேட்டு விபத்தில் இறந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-20 01:32 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி சாந்தி (வயது 58). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது திடீரென சாந்தியின் உடலை சாலையில் வைத்து விபத்தில் இறந்த சாந்தி குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவருக்கு நிவாரணம் உதவி வழங்க முடியாது. இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

Tags:    

Similar News