ஆக்கிரமிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி தாசில்தார்

நீதிமன்ற நேரம் முடியும் வரை நீதிமன்றத்திலேயே தாசில்தார் அமர வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

Update: 2022-08-05 13:32 GMT

 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 12 வாரங்களில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கலசப்பாக்கம் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. 2017 டிசம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நிலுவையில் இருந்த இந்த வழக்கு 2022 ஜூன் மாதம் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. நான்கு வாரங்களில் உத்தரவை அமல்படுத்துவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. நான்கு ஆண்டுகளாக உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறிய 'முதல் பெஞ்ச்' சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்க போவதாக தெரிவித்தது.

இதையடுத்து இரண்டு நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டும் அதை ஏற்க மறுத்த முதல் பெஞ்ச் கலசப்பாக்கம் தாசில்தாராக இருந்த பெண் அதிகாரியை குற்றவாளி என அறிவித்தது.தண்டனை விபரத்தை அறிவிக்க இன்று  5ம் தேதி  ஆஜராகும்படி உத்தரவிட்டது.

இதன்படி பெண் தாசில்தார் லலிதா உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றாததற்கு மன்னிப்பு கோரினார்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தாசில்தார் லலிதாவிற்கு நீதிமன்றம் நேரம்  முடியும் வரை நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் 3 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். இதை அடுத்து தாசில்தார் மாலை வரை நீதிமன்றத்தில் ஊழியர்கள் அமர வைத்தனர்.



Tags:    

Similar News