இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்

ஜமுனாமரத்தூர் அருகே நடந்த வாகன விபத்தில் 11 ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-26 06:47 GMT

பைல்படம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா பெருமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் அரவிந்த் (வயது 18). இவர், ஜமுனாமரத்தூரில் உள்ள வனத்துறை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது நண்பர்கள் பிரவின்குமார் (15), கிரி (16), நந்தா (18). இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆலஞ்சனூர் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை காண சென்றனர். இதில் பிரவின்குமாரும், கிரியும் 11-ம் வகுப்பும், நந்தா 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளை அரவிந்த் ஓட்டினார். ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் சென்ற போது திடீரென அரவிந்தின் கட்டுபாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் அங்கிருந்த கருங்கல்லில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News