கலசபாக்கம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

கலசபாக்கம் அருகே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-04 06:16 GMT

கலசபாக்கம் அருகே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம் எர்ணாமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எர்ணாமங்கலம், ஈச்சம்பூண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த சில வாரங்களாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 20 பேருக்கு மட்டுமே வேலை வழங்குவதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலசபாக்கத்தில் இருந்து செங்கம் செல்லும் மெயின் ரோட்டில் திடீரென நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் கலசபாக்கம் வட்டார கிராம ஊராட்சி அலுவலர் பிரித்திங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வட்டார கிராம ஊராட்சி அலுவலர் பிரித்திங்கராஜ் பேசுகையில், தற்போது தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு நிதி குறைவாக உள்ள காரணத்தால் இப்பணி குறைந்த ஆட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News