கலசப்பாக்கம் ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2023-09-12 10:49 GMT

ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் ரூபாய் 22.61 லட்சத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசியதாவது

கடலாடி பகுதியில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யும் போது எங்கள் பகுதிக்கு புதிய ரேஷன் கடை வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். அதேபோல் எங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் மற்றும் புதிய பகுதி நேர ரேஷன் கடை ரூபாய் 22.61 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

தொலைதூரம் சென்று மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு கடினமாக உள்ளது என்பதால் அவர்களின் அருகாமையில் பகுதி நேர ரேஷன் கடையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அங்கன்வாடி கட்டிடத்தில் குழந்தைகள் தாராளமாக அமர்ந்து பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.

இந்த இரண்டு கட்டிடமும் மக்களுக்கு தேவையான மிக முக்கியமான கட்டிடம். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எம்எல்ஏ கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தைகள் நல அலுவலர்கள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News