சாலையோர பாலத்தில் கார் மோதி பெண் பலி

கலசபாக்கம் அருகே சாலையோர பாலத்தில் கார் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-11-30 02:36 GMT

நாயுடு மங்கலம் அருகே நடந்த கார் விபத்து

கர்நாடக மாநிலம், பெங்களூரு வி.வி.புரம் ராமஅய்யங்கார் தெருவைச் சேர்ந்தவர் சுகேஷ்பாபு (வயது 55). இவர் காரில் குடும்பத்தினருடன் வேலூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் திருவண்ணாமலை வழியாக பெங்களூருக்கு செல்ல வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே நாயுடு மங்கலம் கூட்ரோடு வந்தபோது, சாலையோர பாலத்தில் திடீரென கார் மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கலசபாக்கம் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சுகேஷ்பாபுவின் மனைவி ஹேமலதாவுக்கு (50) தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் சுகேஷ்பாபு, அவரது தம்பி சீனிவாசகுப்தா, அவரது மனைவி ஸ்ரீலட்சுமி மற்றும் ஆண்டாள் ஸ்ரீராம் ஆகிய நால்வர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News