திருவண்ணாமலை அருகே மின் வேலியில் சிக்கி 2 குழந்தைகளின் தாய் பலி

திருவண்ணாமலை அருகே மின் வேலியில் சிக்கி 2 குழந்தைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-02-17 13:12 GMT

ஜெயந்தி பிணமாக கிடந்த இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள மாயாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். விவசாயி.இவரது மனைவி ஜெயந்தி (வயது 30) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் -மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து ஜெயந்தி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர்.அப்போது அவர் எங்கு சென்றார்  என்பது தெரியவில்லை.

இதற்கிடையே இன்று காலை வயல்வெளி பகுதியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெயந்தி மின்வேலியில் சிக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது.

ஜெயந்தி கையில் நெல்மணிகள் இருந்துள்ளன. கீழ் பாலானந்தல் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது விவசாய பயிர்களை எலிகள் தின்னாமல் இருப்பதற்காக மின்வேலி அமைத்து இருந்ததாகவும், அதனை கவனிக்காமல் அந்த வழியாக வந்த ஜெயந்தி மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த நில உரிமையாளர் மின்வேலியை சுருட்டி வைத்திருந்ததையும், ஜெயந்தி அணிந்திருந்த செருப்புகள் அந்த பகுதியில் சிதறி கிடந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே நில உரிமையாளர், தனது மின்வேலியில் சிக்கி ஜெயந்தி இறந்து இருப்பது தெரிய கூடாது என்பதற்காக அவரது உடலை 300 அடி தூரம் வரை கொண்டு சென்று போட்டுஇருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News