திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் வேலு பிரச்சாரம்

திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் எ.வ. வேலு பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-08 06:08 GMT

திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஒன்றியம் படவேடு பகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், 

இந்தப் படவேடு பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

ஆனால் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வாக்கு சேகரிக்க வந்தபோது திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம்.

அதேபோல் திமுக ஆட்சி வந்தவுடன் தமிழகத்தில் 10 அரசு மருத்துவமனைகள் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கிய ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் எந்த தொகுதிக்கு வழங்க வேண்டும் என சிந்தித்துப் பார்த்ததில் கடந்த 10 ஆண்டு காலமாக கலசப்பாக்கம் தொகுதி படவேடு பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக கேட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் இப்பகுதிக்கு வழங்குவோம் என நானும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனும் முதலமைச்சர் இடம் கூறி அனுமதி பெற்று படவேடு பகுதியில் இந்த ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைப்பதற்கு பூமி பூஜை பணிகள் செய்து அதன் கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்படும்.  

அதேபோல படவேடு பகுதியில் உள்ள செண்பகத் தோப்பு அணை மூலம் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் தரம் உயர்த்தி உயர்மட்ட பாலமாக திமுக ஆட்சியில் தான் அமைக்கப்பட்டது.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புணரமைத்தல் பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

மேலும் இப்பகுதிக்கு பல திட்டங்கள் செய்ய உள்ளோம், திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து மோடி அரசை முழுமையாக விரட்டி அடிக்க வேண்டும். நீங்கள் இந்தியா கூட்டணியான திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என உங்களை கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் பேசினார். 

அதனைத் தொடர்ந்து ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு போளூர், சேத்துப்பட்டு, மொடையூர், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.  அப்போது அவர் பேசுகையில்,

திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அவர்கள் இல்லம் தேடி பல திட்டங்கள் செல்கிறது .அதேபோல் திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சி மக்களின் ஆட்சி, இதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் . உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என அமைச்சர் வேலு பேசினார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News