சுடுகாட்டு பிரச்சினையில் ஆண்கள் தலைமறைவு: பெண்களே மூதாட்டியின் உடல் அடக்கம்

கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பிரச்சினையில் ஆண்கள் தலைமறைவாக இருப்பதால் இறந்த மூதாட்டியின் உடலை பெண்களே எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

Update: 2022-01-21 01:32 GMT

இறந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எடுத்துச்செல்லும் பெண்கள்.



திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டது.

இதனால் அங்கு தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கருப்பாயி என்ற 75 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் தலைமறைவானதால், விவசாய நிலத்தில் இறந்த மூதாட்டியின் உடலை பெண்களே சுமந்து வந்து இரவில் ரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் நேற்று  முழுவதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் சம்பவ இடத்திற்கு சென்று யார், யார் வன்முறையில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது மட்டும்தான் வழக்கு பதியப்படும்.

சம்பந்தமில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். எனவே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மூதாட்டியின் மகன் பொன்னுசாமியை மட்டும் வரவழைத்து சடங்குகள் செய்து, உடலை பெண்களே எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News