பருவதமலையில் தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி

கலசபாக்கம் அருகே உள்ள பருவதமலையில் கள்ளக்காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கினர். காவல்துறை விசாரணை

Update: 2022-01-25 07:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்திலும், வார விடுமுறை நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து அதிகமான இளைஞர்கள், பெண்கள் ஜோடியாக பருவத மலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று  மாலை கடலாடி பகுதியில் இருந்து மலை மேல் செல்லும் பாதையில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை மலை மீது கடைவைத்திருக்கும் ஒருவர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடலாடி காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மலைமீது ஏறிச்சென்று பார்த்தபோது ஆணும் பெண்ணும் ஒரே மரத்தில் சேலையில் ஜோடியாக தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.

இவர்கள் இறந்து சில நாட்களாகி உள்ளதால் துர்நாற்றம் வீசியது. மேலும் அவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு பேக், ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பேக்கில் இருந்த இரண்டு ஆதார் கார்டுகளை போலீசார் எடுத்து பார்த்ததில் இறந்த பெண்ணின் பெயர் தேவி (வயது 26), காஞ்சீபுரம் மாவட்டம் பள்ளிகரணை பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஆண் ராஜசேகர் (43) காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ராஜசேகர் சென்னையில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்ததாகவும், அங்கு தேவி வேலைபார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளதாகவும், இந்த நிலையில் தேவியை அவருடைய வீட்டுக்கு தெரியாமல் ராஜசேகர் அழைத்து வந்துவிட்டதாக பெண்ணின் தந்தை அன்பழகன் காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News