வாரசந்தையில் வியாபாரத்தோடு வாக்கு சேகரித்த வேட்பாளர்

நமக்காக யார் இருப்பார்கள் என தராசு போல் எடை போட்டு பார்த்து வாக்களியுங்கள் என கலசபாக்கம் அதிமுக வேட்பாளர் பரப்புரை

Update: 2021-03-20 12:00 GMT

திருவண்ணாமலை மாவட்டம்,கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாக்கம் ஏரிக்கரையில் வெள்ளியன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் வியாபாரத்தில் இடம் பெறுவது வழக்கம். இதில் கலசப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொது மக்கள் மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வாரச்சந்தை நடைபெற்றது. இந்த வாரசந்தையில் கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளர் வி.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதியவர்களின் காலில் விழுந்தும் அங்கு வந்திருந்த பொது மக்களிடமும் வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒரு வியாபாரி தராசில் எடையை நிறுத்தி வியாபாரம் செய்துகொண்டிருந்தார். இதனை பார்த்த வேட்பாளர் அந்த வியாபாரியிடம் இருந்து தராசை வாங்கி, தராசு எப்படி எடையை சமநிலையில் நிறுத்தி காய்கறியை எடைபோடுமோ அதுபோல் பொதுமக்கள் அதிகமாக மக்களோடு மக்களுக்காக யார் இருப்பார்கள் என்பதை எடை போட்டு பார்த்து வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

எம்எல்ஏ கடையில வியாபாரம் செய்கிறார் என்ற செய்தி அங்கே இருந்த மக்களிடம் காட்டுத்தீ போல் பரவியது. இது வேட்பாளரின் காதுக்கு எட்டவே திடீரென ஒரு காய்கறி கடையில் அமர்ந்து பொது மக்களுக்கு தனது கைகளால் காய்கறிகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

2021ல் இவர்தான் மீண்டும் எம்எல்ஏ என்று பொதுமக்கள் பேசும் அளவுக்கு நூதன வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் ஈடுபட்டது அப்பகுதியில் இருந்த பொது மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News