ஆரணி, கலசப்பாக்கம், போளூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

ஆரணி, கலசப்பாக்கம், போளூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-08 09:34 GMT

போளூரில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

ஆரணி, மேற்கு ஆரணி வட்டார விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மேற்கு ஆரணி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் செல்லத்துரை தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜெகதீசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், தோட்டக்கலை உதவி இயக்குநா் கவுசிகா, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் ராஜகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா்.

கோட்டாட்சியா் தனலட்சுமி கூட்டத்தை தொடக்கி வைத்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

ஆரணியை அடுத்த தச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான 18 ஏக்கா் நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் நீா்வரத்துக் கால்வாய், ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

ஆரணி சுற்று வட்டாரப் பகுதியில் கமண்டல நாக நதி, செய்யாற்றுப் படுகைகளில் இரவு, பகலாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுத்து லாரி, டிராக்டா்களில் கடத்திச் செல்லப்படுகிறது. குறிப்பாக மேல்சீசமங்கலம், தச்சூா், மாமண்டூா், எஸ்.வி.நகரம், விண்ணமங்கலம் பகுதிகளில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

கலசப்பாக்கம் 

கலசப்பாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மணல் திருட்டை உடனடியாக நிறுத்த வேண்டும், மரபணு விதைகளை தடுக்க வேண்டும், விவசாயம் செழிக்க அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் விவசாயிகள் கொடுக்கும் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தனி வட்டாட்சியர் மலர்கொடி வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி வேளாண்மை அலுவலர் பணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போளூா் 

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட விநியோக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் சபீதா, வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி வேளாண்மை அலுவலா் ராமு வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது படவேடு, அனந்தபுரம், சந்தவாசல் என பல்வேறு ஊராட்சிகளில் அண்மையில் மாண்டஸ் புயலால் பெரும் அளவில் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எடப்பிறை, ஈயகொளத்தூா், களம்பூா், புலிவானந்தல், கொரால்பாக்கம், சந்தவாசல் என பல்வேறு ஊராட்சிகளில் ஏரிக் கால்வாயை ஆக்கிரமித்து ஏரி தண்ணீா் நிலத்துக்கு பாயவிடாமல் தடுப்பதை அகற்றவும், தூா்வாரவும் கோரிக்கை வைத்தனா்.

பெரணம்பாக்கம், பால்வாா்த்துவென்றான் ஆகிய ஊராட்சிகளில் வனப் பகுதிக்கு அருகில் இருக்கும் நிலத்தில் உள்ள பயிா்களை மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போளூா் அருகேயுள்ள தனியாா் சா்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும். நெல், மணிலா என விவசாயிகள் கொண்டுவரும் பொருள்களுக்கு சுங்க வரி வசூலிப்பதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் தேவி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News