முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது

Revenue Inspector - முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-21 00:33 GMT

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷாயாஜி பேகம்.

Revenue Inspector - திருவண்ணாமலை மாவட்டம் ஊசாம்பாடி பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா, கனகா, குப்பு ஆகிய மூன்று பெண்கள் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். அவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேரும் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், மனு கொடுத்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

அப்போது மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் லஞ்சமாக தலா ரூ.15 தர வேண்டும் என வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் கேட்டுள்ளார். அதன்படி 3 பேரும் முதற்கட்டமாக தலா ரூ.5 ஆயிரம் என ரூ.15 ஆயிரத்தை லஞ்சப் பணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்ட ஷாயாஜி பேகம் மீதமுள்ள பணத்தை கொடுத்தால்தான் முதியோர் உதவித்தொகை வழங்க பரிந்துரைப்பேன் என கூறிவிட்டார்.

இவர்களில் லஞ்சம் கொடுக்க வசதி இல்லாத சுலோச்சனா திருவண்ணாமலை லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரியை அணுகியுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதுமல்லவாடி கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்திடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த துணை போலீ்ஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்தினை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அங்கேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்தின் பையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News