நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பருவ காலத்தில் திறக்க விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பருவ காலத்தில் திறக்க வேண்டும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை

Update: 2022-10-12 13:00 GMT

நேரத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து, வேலூா்-திருவண்ணாமலை சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை துறை தோட்டக்கலை உதவி இயக்குனர் கௌசிகா ஆரணி வட்டாட்சியர் ஜெகதீசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும் போது ஆரணி தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது 52 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தத்தில் 5 பிர்க்கா உள்ளது.  ஒரு ஆய்வாளர் உள்ளார். கூடுதலாக வருவாய் ஆய்வாளர்களை அதிகரிக்க வேண்டும் அதற்கான பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.

மேலும் பயிர் சாகுபடி செய்யும் பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் பருவம் முடிந்த பிறகு திறப்பதால் விவசாயிகள் பயன்பெற முடியவில்லை . கிராமங்களில் உள்ள ஏரியிலிருந்து ஆறு ஏரிகளுக்கு செல்லும் ஏரி கால்வாய்கள் சீரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை வைத்து பேசினர்.

கலசப்பாக்கம் அருகே  நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில், 1 மணி வரை மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரண்யாதேவி வராததால் விவசாயிகள் காத்திருந்து வெளியேறினா். அப்போது, மாவட்ட உதவி இயக்குநா் குறைதீா் கூட்டத்துக்கு வந்தாா். மேலும், அவா் விவசாயிகளை அழைக்காமல் சென்று கூட்டரங்கில் அமா்ந்தாா்.

இதனால் விவசாயிகள் நேரத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து, வேலூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து அறிந்த கலசப்பாக்கம் காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர், வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தரஜூலு, வேளாண்மை உதவி இயக்குநா் செல்வராஜ் ஆகியோா் சென்று விவசாயிகளிடம் சமரசம் பேசினா். ஆனால், விவசாயிகள் வரமறுத்து மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், கூட்டரங்கில் இருந்த விவசாயிகளை மட்டும் வைத்து மாவட்ட உதவி இயக்குநா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதை அறிந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, உதவி இயக்குநா் சரண்யாதேவி பல்வேறு பணிகள் காரணமாக நேரத்துக்கு வரமுடியவில்லை. எனவே, உங்களது கோரிக்கைபடி வருகிற செவ்வாய்க்கிழமை மீண்டும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என அறிவித்தாா்.

இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Tags:    

Similar News