வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கத்தில் வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-09 05:58 GMT

விவசாயிகள் குறைதீர்வு நாள்  கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் லட்சுமிநரசிம்மன் தலைமை தாங்கினார். பிடிஓ வேலு, தாசில்தார் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.  கலசப்பாக்கம் தாலுகாவை ஆரணி கோட்டத்தில் இருந்து பிரித்து திருவண்ணாமலை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ஆதமங்கலம் கிராமத்தில் உடனடியாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்.

பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் அளித்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி பட்டா மாற்ற உத்தரவுகளை வழங்க வேண்டும்  என பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.  முடிவில் சமூக பாதுகாப்பு தாசில்தார் மலர்கொடி நன்றி கூறினார். விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு யூரியா அதிக விலைக்கு விற்பதையும், தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியும், கலசபாக்கம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கதிரேசன், வெங்கடேசன், சிவலிங்கம், நடராஜன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News