ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அகற்றம்

நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கோர்ட் உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது

Update: 2023-02-25 06:10 GMT

நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகம்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கோர்ட் உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது.

ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றொரு வழக்கில், நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதற்காக, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று, உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காரவாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை ஏரிக்கு சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூட்டுறவு நியாய விலை கடை, மகளிர் சுய உதவி குழு கட்டிடம், சமுதாய கட்டிடம், பொது கழிப்பறை கட்டிடம், குப்பை சேமிப்பு கிடங்கு கட்டிடம் உட்பட  6 கட்டிடங்களும் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ளன.

 தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகமும் நீர்ப்பிடிப்பு பகுதியிலேயே கட்டப்பட்டு வந்தது. ஆனால் நீர் பிடிப்பு பகுதிகளில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது என, கோர்ட் விதிமுறைகள் வகுத்துள்ளது.

அதனை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கடலாடி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல புகார் மனு அளித்திருந்தார். நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களை அனைத்தையும் அகற்ற வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து சிங்காரவாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றி தரைமட்டமாக்கினர். இதனையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News