கலசபாக்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி
கலசபாக்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியர், அவரது குடும்பத்தில் 8 மாத குழந்தை உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.;
கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதாரத்துறையினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடலாடி வட்டார மருத்துவ குழுவினர் பள்ளிக்கு சென்று அங்கு ஆசிரியருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அவர் பாடம் நடத்திய வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதேபோல், அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆசிரியர் குடும்பத்தில் உள்ள 8 மாத குழந்தை உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தை உள்பட 5 பேரும் தனிமைப்படுத்தப்படடனர். மேலும் பள்ளியில் 50 மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.