கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-05-27 00:46 GMT

அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்த ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோட்டூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் வட்டார நாற்றாங்காலில் பலவகை மரகன்றுகளை வளர்க்கும் பணியினை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, அருகில் உள்ள வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.

மேலும் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் எம்.எம்.டி.ஏ. முதியோர் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தங்கியிருந்த முதியோர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப்பிட்டு பார்த்தார். அங்கிருந்த குழந்தைகளிடம் உரையாடினார்

பின்னர் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயின்று அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் பத்மபிரியா மற்றும் யோகேஸ்வரி ஆகியோரை பாராட்டி புத்தகங்களை வழங்கினார்.

தொடர்ந்து கோயில்மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு கூடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அருணகிரிமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி குழந்தைகள் மைய கட்டிடத்தினை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

மேல்வில்வராயநல்லூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறையினை கேட்டறிந்தார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 58 லட்சம் மதிப்பில் மேல் வில்வராயநல்லூர் முதல் எர்ணாமங்கலம் வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலைகள் தரமாகவும் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சத்தியமூர்த்தி, கலசபாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, மேல் வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பார்த்திபன், விண்ணுவாம்பட்டு கால்நடை மருந்தக மருத்துவர் வெங்கடேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News