வீரளூர் கிராமத்தில் இறந்தவரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்

வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை தொடர்பான பிரச்சினை உள்ளதால், இறந்தவரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2022-03-24 01:26 GMT

வீரளுர் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதி சுடுகாட்டு பாதை சரியில்லாத காரணத்தால் ஊரின் வழியாக செல்லும் மெயின் ரோடு வழியாக இறந்தவரின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்ய அனுமதி பெற்று இருந்தனர்.

இதனால் இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டு சமரசம் செய்யப்பட்டு இருந்த நிலையில் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் சென்னையில் விபத்தில் இறந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய நேற்று வீரளூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் அப்பகுதியில் மீண்டும் பிரச்சினை ஏற்படுமோ என்ற காரணத்தால் எஸ்பி பவன்குமார் தலைமையில் ஏஎஸ்பி , 4 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கோவிந்தசாமி உடலை ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த வீரளூர் கிராமத்தின் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அக்கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News