பைக் மீது கார் மோதல்: கணவன், மனைவி உயிரிழப்பு

பைக் மீது கார் மோதியதில், கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர்

Update: 2023-04-24 11:04 GMT

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்பாலுார், கொல்லக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன், 40. இவரது மனைவி ராஜேஸ்வரி, 35.தம்பதி, பைக்கில் ஆரணிக்கு சென்றனர்.

அப்போது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மாதிமங்கலம் அருகே கரூரிலிருந்து வேலூர் நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்கிருந்தவர்கள் கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் வெங்கடேசனை கைது செய்தனர்.

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கார், பைக் மீது மோதியது:

செங்கத்திலிருந்து இன்று மாலை தனியார் பஸ் ஒன்று திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் போளூர் சாலையில் வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்புறம் சென்ற கார் மற்றும் பைக் மீது மோதியது.

இதனால் மோட்டார் சைக்கிளில் 2 குழந்தைகளையுடன் வந்த தம்பதியினர் கீழே விழுந்தனர். இதில் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. அத்துடன் விபத்துக்குள்ளான காரின் ஒரு பக்கம் சேதம் ஏற்பட்டது.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த சிறுவனையும், அவரது தந்தையையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

திருவண்ணாமலையில் தீக்குளித்து பெண் தற்கொலை: 

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதா (வயது 32). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி பார்த்திபன் குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது குழந்தைகளை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்த்திபனிடம் அமுதா கேட்ட போது எந்தவித பதிலும் சொல்லாமல் அவர் வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த அமுதா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News