செய்யாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலத்திற்கு பூமி பூஜை!

செய்யாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலத்திற்கு பூமி பூஜை, துணை சபாநாயகர் பங்கேற்பு

Update: 2024-02-27 02:27 GMT

உயர்மட்ட பாலத்திற்கு பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை முதல் காலூர் வரை கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது;

தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவு திமுக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 60 உயர்மட்ட பாலங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.

அதில் கலசபாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை செல்ல வேண்டிய நிலை வேண்டும் என்றால் சுமார் 30 கிலோமீட்டர் மேல் சென்று தான் திருவண்ணாமலைக்கு செல்ல முடியும். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள இந்த செய்யாற்றின் குறுக்கே ஒரு உயர்மட்ட பாலத்தை 1996 இல் அமைத்துக் கொடுத்தார்.

பொதுமக்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வதற்கு ஒரு சுலபமான வழியை மக்களுக்கு அமைத்துக் கொடுத்தது இந்த திமுக ஆட்சியில் தான்.

இந்தியாவில் வளர்ச்சியான மாநிலமாக தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் மாற்றி வருகிறார், அதேபோல் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வந்தது, பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான்.

அவர் வழியில் பின்பற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்காக இலவச பேருந்து பயணம், பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ஆயிரம் ,குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பல்வேறு திட்டங்களை பெண்கள் வளர்ச்சி அடைய செய்து வருகிறார்.

இந்த உயர்மட்ட பாலம் ஒரு ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பணிகளை விரைந்து முடியுங்கள் அதே போல் கலசப்பாக்கம் தொகுதியில் இந்த மூன்று ஆண்டில் சுமார் 15 பாலங்கள் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடம் கோரிக்கை வைத்து 15 பாலங்களை கலசப்பாக்கம் தொகுதிக்காக வழங்கி அதில் முக்கியமான மூன்று பாலங்களை அவர் கையால் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்துள்ளார்கள், அதன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பணிகளும் விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் ,தாசில்தார்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News