திருவண்ணாமலை அருகே கலைஞர் நூற்றாண்டு விழா: பயனாளிகளுக்கு கடனுதவி
திருவண்ணாமலை அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.;
பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கிய அண்ணாதுரை எம்பி மற்றும் சரவணன் எம்எல்ஏ
திருவண்ணாமலை அருகே கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் ரூ.11.64 கோடியில் 1,697 பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம், கலசப்பாக்கம் வட்டங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் இணைந்து புதிய உறுப்பினா் சேர்த்தல், கடனுதவி வழங்கும் விழா காஞ்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மண்டல இணை பதிவாளர் நடராஜன் முன்னிலை வகித்தார் . திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டு கூட்டுறவு சங்கங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களையும் பயனாளிகளுக்கு பல்வேறு விதமான கடனுதவிகளையும் வழங்கினார்கள்.
இதில் 161 நபர்கள் சங்கங்களின் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 25 பயனாளிகளுக்கு ரூபாய் 6 லட்சத்து 25 ஆயிரம் மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்கப்பட்டது.
161 பேருக்கு சேமிப்புக் கணக்குப் புத்தகங்களும் , 1,697 பயனாளிகளுக்கு ரூ.11.64 கோடியில் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் , உறுப்பினர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள் , வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்கள் , உதவி பொது மேலாளர்கள் , வங்கி மேலாளர்கள் , வங்கி பணியாளர்கள் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் , கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
விழாவின் முடிவில் திருவண்ணாமலை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.