பருவதமலை உச்சியில் தீபம் ஏற்றிய5 பேருக்கு மூச்சுத்திணறல்

பருவதமலை உச்சியில் தீபம் ஏற்றிய 5 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-11-21 01:30 GMT

கலசப்பாக்கம் அருகே உள்ள பருவதமலை

கலசபாக்கம் அருகே பருவதமலை உச்சியில் தீபம் ஏற்றிய 5 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மாதிமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை மீது பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. 

இந்த மலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறிச்சென்று சாமிக்கு பக்தர்களே பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று  கலசபாக்கம் அருகே உள்ள நாமத்தன் குட்டை கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 40), பிரியதர்ஷன் (30), பாலாஜி (20), தேவராஜ் (17), ராஜதுரை (16) ஆகிய 5 பேரும் பருவதமலைக்கு சென்றுள்ளனர்.

மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றிவிட்டு, மலை உச்சியில் கோவிலின் அருகில் உள்ள ஜெனரேட்டர் அறையில் மழையின் காரணமாக 5 பேரும் கதவை பூட்டிக்கொண்டு தூங்கி உள்ளனர்.

அந்த அறையில் ஜெனரேட்டர் ஓடியதால் புகை அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பேரும் மயங்கி உள்ளனர். 

ஜெனரேட்டர் அறையில் இருந்து புகை அதிகம் வருவதை கவனித்த பக்தர் ஒருவர் உடனடியாக கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி அறிந்ததும் கடலாடி போலீசார், வட்டார மருத்துவர்கள், போளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உடனடியாக மலை உச்சிக்கு சென்று அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News