திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக் ‘சீல்’

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கிளினிக்குக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

Update: 2023-04-14 05:34 GMT

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்கை மூடி  ‘சீல்’ வைக்கப்பட்டது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் செயல்பட்டு வரும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், மருந்தகங்களை கண்டறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் செயல்பட்டு வந்த யஷ்வந்த் என்ற கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் வினீத்திற்கு புகார் வந்தது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். உடனே மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையில், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று யஷ்வந்த் கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.

 அப்போது கடந்த 2019-ம் ஆண்டு வேறு ஒருவரின் பெயரில் உரிமம் பெற்று, தற்போது அந்த உரிமத்தை அண்ணாத்துரை என்பவர் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அண்ணாத்துரை ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் செயல்பட்ட கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக அண்ணாத்துரை என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்துள்ளதாக கூறியதால், அவரது படிப்பு சான்றிதழ்களுடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது,

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்டு வரும் மருந்தகங்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்று சந்தேகப்படும்படியாக மருந்தகங்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்.

அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள கிளினிக்கில் சிகிச்சை அளித்து வந்த அண்ணாத்துரையின் படிப்பு சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக அவர் ஆயுர்வேதம் படித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உரிய அனுமதியின்றி அலோபதி சிகிச்சை வழங்கி உள்ளார். அவர் ஆயுர்வேதமாவது படித்துள்ளாரா? என ஆய்வு செய்து, இதன் பின்னர் குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News