பள்ளியில் குழந்தைகளை விட வந்த தாய்; அதே பள்ளி பஸ் மோதி பலி

tirupur News, tirupur News today- திருப்பூரில், குழந்தைகளை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு, ஸ்கூட்டரில் திரும்பிச் சென்ற தாய் மீது, அதே பள்ளி பஸ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.;

Update: 2023-03-30 14:04 GMT

tirupur News, tirupur News today- திருப்பூரில், பள்ளி பஸ் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். (மாதிரி படம்)

tirupur News, tirupur News today- திருப்பூர் கூலிபாளையம் அருகே தனியார் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் மீது அதே பள்ளியின் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம், வெங்கடாசலபதி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41), ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருடைய மனைவி ராதா (32). இவர்களுக்கு மனோஜ் (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், ரித்திகா (12) என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

ராதா நேற்று காலை திருப்பூர் கூலிபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தனது 2 குழந்தைகளையும் விடுவதற்காக ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் குழந்தைகளை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில், பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த அதே பள்ளியின் பஸ் எதிர்பாராத விதமாக ராதாவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராதாஅந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றி தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் ராதாவின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் பலியான ராதாவின் உறவினர்கள் திரண்டு உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தி ராதாவின் உடலை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராதாவின் உடலை அங்கிருந்து எடுக்க விடாமல், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. ஒரு கட்டத்தில் ராதாவின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து பஸ்சை பறிமுதல் செய்ய வேண்டும் என்று ராதாவின் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 

நீண்ட இழுபறிக்குப்பின் உறவினர்களை சமாதானப்படுத்திய போலீசார் ராதாவின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ் டிரைவர் திருப்பூர் இடுவம்பாளையம் கிரீன் அவென்யூவைச் சேர்ந்த கந்தசாமி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் இறந்த ராதாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News