திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

Tirupur News-திருப்பூா் மாநகராட்சி 59-ஆவது வாா்டில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால், மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2024-04-30 03:07 GMT

Tirupur News-மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகராட்சி 59-ஆவது வாா்டில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால் 9 கிலோ மீட்டா் தொலைவு சுற்றிச் செல்வதாகவும், மீண்டும் பணியை தொடங்கக் கோரியும் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று (திங்கள்கிழமை) முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 59-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பூந்தோட்டம், வள்ளலாா் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதிக்கு உள்பட்ட முத்தனம்பாளையம் - விஜயாபுரம் இணைப்பு சாலை அமைப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டு சாலைப் பணிக்காக கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோா் என ஏராளமானாா் சுமாா் 9 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் நல்லூா் 3-ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:

முத்தனம்பாளையம் பகுதியில் இருந்து விஜயாபுரம் செல்லும் சாலையை கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாநகராட்சி நிா்வாகம் பணிகளை தொடங்கியது. ஆனால், பணிகள் மேற்கொள்ளாமல் பாதியில் விடப்பட்டது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், தனிநபா் ஒருவருக்கு சொந்தமான இடம் குறுக்கீட்டால் பணியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

மேலும் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள நிலையில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு கூட பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே உடனடியாக காலம் தாழ்த்தாமல் சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். இல்லையென்றால் ஊா் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

இதைத் தொடா்ந்து, 3-வது மண்டல உதவி ஆணையா் வினோத் மனுக்களை பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். 

Tags:    

Similar News