அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில் சுகி சிவம் பேச்சு

Tirupur News- உலகத்தில் எல்லா உயிர்களும், ஏங்குவது அன்புக்காக மட்டும் தான். அன்பை வாரி வழங்குங்கள், என்று திருப்பூரில் நடந்த மனவளக்கலை மன்ற விழாவில், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார்.

Update: 2024-04-29 18:18 GMT

Tirupur News- திருப்பூரில் நடந்த விழாவில், சொற்பொழிவாளர் சுகி சிவம் பேசினார். (கோப்பு படம்) 

Tirupur News,Tirupur News Today- உலகத்தில் எல்லா உயிர்களும், ஏங்குவது அன்புக்காக மட்டும் தான். அன்பை வாரி வழங்குங்கள், என்று திருப்பூரில்  மனவளக்கலை மன்ற விழாவில் சுகி சிவம் பேசினார்.

திருப்பூர், கருவம்பாளையத்தில் உள்ள திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா, அறங்காவலர்கள் குடும்ப விழா மற்றும் நன்கொடையாளர்களின் நன்றி பாராட்டு விழா என, முப்பெரும் விழா ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்தது.

அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் முரளி வரவேற்றார். ஆலோசகர்கள் கந்தசாமி, சிவாச்சலம், மோகன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசகர் நாகராஜன், சுந்தர்ராஜ் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறங்காவலர் சீனியம்மாள், துணை தலைவர் முத்துசாமி, பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங் கேற்றனர்.

இவ்விழாவில், 'தொண்டாற்றி இன்பம் காண்போம்' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சுகி சிவம் பங்கேற்று பேசியதாவது:

மனித மனம், 50 ஆயிரம் முதல், ஒரு லட்சம் வரை எண்ணங்கள், அன்றாடம் வந்து செல்கின்ற இடம். எங்கு மனதை, அறிவை பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் தெரிய வேண்டும். இரண்டுக்கு நடுவில் என்று சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.

நற்பெயரை ஏற்படுத்துவதை விட, அதை தொடர்ந்து, அப்பெயரை தக்க வைப்பது என்பது சிரமம். மனதுக்கு ஒரு பயிற்சி தேவை. 'எங்கிட்ட ஏன் அவர் அன்பாக இல்லை' என்று கேட்காத, நினைக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். நகைக்கு, துணிக்கு, பதவிக்கு ஏங்கவில்லை. உலகத்தில் எல்லா உயிர்களும், ஏங்குவது அன்புக்கு மட்டும் தான்.

வீடுகளில் கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காத காரணத்தால் தான், அவர்கள் வேறு வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர். வாழ வேண்டிய வயதில் போதை வஸ்துகளை நாடுகின்றனர். அன்பு கிடைத்தால், போதை வஸ்துகளை பயன்படுத்தமாட்டார்கள். அன்பில் கிடைக்கும், மகிழ்ச்சி, சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. பெற்றோரிடமும், பிள்ளைகள் நலம் விசாரிக்க வேண்டும்.

ஒவ்வொரு விஷயத்திலும் நன்றி உணர்வு வேண்டும். அப்படி இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். நீங்கள் தொண்டு செய்யுங்கள், உலக சமுதாயம் இன்புறும். தனிமனித வாழ்க்கைக்கு அன்பை வாரி வழங்குங்கள். உலக நன்மைக்கு தொண்டை புரியுங்கள்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Tags:    

Similar News