திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ‘சிட்டுக்குருவிகள் தினம்’

Tirupur News- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ‘சிட்டுக்குருவிகள் தினம்’என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-03-21 12:32 GMT

Tirupur News- இன்று சிட்டுக்குருவிகள் தினம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-2 சாா்பில் ‘நான் சிட்டுக்குருவியை நேசிக்கிறேன்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (புதன்கிழமை) நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித் திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், பறவை ஆா்வலா்கள் கீதாமணி, முருகவேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசியதாவது: அழிந்து வரும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை சிட்டுக்குருவிகள். மனிதா்கள் அதிகமாக வாழும் இடத்தில் வாழ்ந்த பறவை தற்போது இல்லாமல் போனதற்கு காரணம் கைப்பேசி கோபுரங்கள் மட்டுமல்ல, நகரமயமாதல் என்ற பெயரில் சிட்டுக்குருவியின் வாழ்விடங்கள் இல்லாமல்போனதே.

தற்போது கிராமப் புறங்களிலும், வயல்வெளிகளிலும் மட்டுமே இவற்றைக் காண முடிகிறது. மற்ற பறவைகள்போல இவற்றுக்கு கூடு கட்டி வாழத் தெரியாது. வீடுகளில் உள்ள பொந்துகளிலும், ஓடுகளுக்கு அடியிலும், புதா்களிலும் சிறுசிறு பொருள்கள் மற்றும் வைக்கோலை வைத்து முட்டையிடும். அனைவரும் தங்களது வீடுகளில் தானிய உணவுப் பொருள்கள், தண்ணீா் ஆகியவற்றை சிறிய மண் சட்டியில் வைத்தால் சிட்டுக்குருவிகள் உயிா் வாழும். சிட்டுக்குருவியின் வாழ்விடங்களை உருவாக்கினால் மட்டுமே அவற்றை நம்மால் பாதுகாக்க முடியும் என்றனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காக்க வேண்டும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் இதுபற்றிய நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியம்.

Tags:    

Similar News