திருப்பூரில் பாலியஸ்டர் ஆடை உற்பத்தி; தொழிலை பாதுகாக்க மாத்தி யோசிங்க!
திருப்பூரில் ஆர்டர்கள் இன்றி, பனியன் உற்பத்தி மந்தமடைந்துள்ளது; வேலை வாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர் நலன் காக்க, பாலியஸ்டர் ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த தொழில் துறையினருக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.;
ஆர்டர் இல்லாததால், ‘வெறிச்’சோடிய பனியன் உற்பத்தி நிறுவனம்.
திருப்பூர் பனியன் உற்பத்தியால், 'டாலர் சிட்டி' என்ற சிறப்பு பெயரை பெற்றது. உள்நாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.25 ஆயிரம் கோடியை எட்டியது. வெளிநாட்டு வர்த்தகம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் சென்றது. பின்னலாடை தொழில் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. இதன்காரணமாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை அள்ளி வழங்கி வந்தது. திருப்பூரில் தங்கி தொழிலாளர்கள் பணி செய்தனர்.
இந்நிலையில் நூல் விலை உயர்வால், பனியன் உற்பத்தி முடங்கியது. பனியன் தொழிலாளர்களை பொறுத்தவரை, தீபாவளி பண்டிகை வரை தொடர்ச்சியாக வேலை நடந்து, பண்டிகைக்கு முன்பு போனஸ் வழங்கப்படும். ஆனால் உள்நாட்டு பனியன் வர்த்தகத்தை பொறுத்தவரை கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி பனியன் வியாபாரம் என்பது திருப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
ஆர்டர்கள் இல்லாமல் வழக்கத்தை விட 10 சதவீதம் அளவுக்கே ஆடை உற்பத்தி நடந்தது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தயாரித்து இருப்பு வைத்திருந்த ஆடைகளையே வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்தனர். புதிய ஆடை தயாரிப்பு மிகவும் குறைந்ததால் தொழிலாளர்களும் வேலையிழப்பை சந்தித்தனர். அந்தந்த பனியன் நிறுவனங்களின் நிலையை கவனத்தில்கொண்டு, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் பலரும், திருப்பூருக்கு இன்னும் திரும்பவில்லை.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு, நிறைய ஆர்டர் வரும், வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்பார்த்த நிலையில், புதிய ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. 25 சதவீத நிறுவனங்களே, இயக்கத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் தேசிய வாரிய உறுப்பினர், 'லகு உத்யோக் பாரதி' தேசிய இணை பொதுச்செயலாளருமான மோகனசுந்தரம் கூறியதாவது;
நூல் விலை உயர்வால், திருப்பூரில் உள்நாட்டு, வெளிநாட்டு பனியன் வர்த்தகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. புதிய ஆர்டர்களும் சூடுபிடிக்கவில்லை. மேலும், ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை கடுமையாகிவிட்டது. உரிய பில் இருந்தால் மட்டுமே சரக்கை அனுப்பும் நிலை ஏற்பட்டது.
பருத்தி ஆடைகளை தயாரித்து வழங்கிய திருப்பூர், நூல் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் பருத்தி ஆடைகளின் தயாரிப்பு செலவு அதிகரித்தது. அதனால், பாலியஸ்டர் ஆடைகளின் விற்பனை அதிகரித்தது. உற்பத்தி செலவு குறைவால் பாலியஸ்டர், டெரிகாட்டன் ஆடைகள் அதிகரித்துள்ளது. தற்போது, இளம் தலைமுறையினர் உள்ளாடைகள் முதல் டி-சர்ட், பேண்ட் வரை நவீன வடிவமைப்பு ஆடைகளை விரும்புகின்றனர். பாக்கெட் ஜட்டி, ட்ரங்ஸ் போன்ற ஜட்டிகள் விற்பனை குறைந்தது. தற்போதைய தலைமுறைக்கு ஏற்ப ஆடை வடிவமைப்பை மாற்றி, திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள், ஆடை உற்பத்தி செய்ய வேண்டும். இந்திய அளவில் தற்போது பாலியஸ்டர் ஆடைகளின் விற்பனை அதிகரித்து விட்டது. உள்நாட்டுசந்தையிலும் விற்பனை உள்ளது. லூதியானா, சூரத், ஆகமதாபாத் போன்ற பகுதிகளில் பாலியஸ்டர் துணிகளை தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலியெஸ்டர் ஆடைகளின் தயாரிப்பு செலவு 25 சதவீதம் குறைவு. அதை அணிவதில் இளம்வயதினர் நாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூரில்உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் பாலியஸ்டர் ஆடை தயாரிப்புக்கு மாற வேண்டும். பருத்தி ஆடை தயாரிப்பில் தான் திருப்பூருக்கு பெயர் கிடைத்தது. பழமையையே நினைத்துக்கொண்டிருக்காமல், தற்போதைய மார்க்கெட் நிலவரத்தை அறிந்து பாலியஸ்டர் ஆடை தயாரிப்பில் இறங்கினால்தான் திருப்பூரில் ஆடை தயாரிப்பு அதிகரிக்கும். வெளிமாநில ஆர்டர்களும் திருப்பூருக்கு வரும். தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பாலியஸ்டர் ஆடை தயாரிப்புக்கான கட்டமைப்புகள் திருப்பூரில் அதிகம்உள்ளதால், எவ்வித சிரமத்தையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பனியன் உற்பத்தியாளர்கள் முனைப்புடன் பாலியஸ்டர் ஆடை உற்பத்தியை தொடங்கவேண்டும்.
தற்போது திருப்பூரில் 20 சதவீதம் நிறுவனங்கள் பாலியஸ்டர் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் பாலியஸ்டர் ஆடைகள் தயாரிப்பு அதிகமாக உள்ளதால் இந்திய ஆர்டர்கள் கேரளாவை நோக்கி செல்கிறது. விளையாட்டு வீரர்களின் ஆடைகள் தயாரிப்பும் திருப்பூரை விட்டு, மற்ற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டது. இனியும் காலம் கடத்தாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத்தினர் பாலியஸ்டர் ஆடை தயாரிப்புக்கு மாற வேண்டும். திருப்பூரில் உள்ள உள்நாட்டு ஆடை தயாரிப்பு தொழில் அமைப்பினர், இந்திய ஜவுளி சந்தையின் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். மார்க்கெட்டில் எந்த ஆடைகள், எந்தவிதமான வடிவமைப்பு ஆடைகள் விற்பனையாகிறது என்பதை அறிந்து அந்த ஆடை தயாரிப்பில் இறங்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர்களை அழைத்து பயிற்சி வகுப்பு நடத்தி புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். டிசம்பர் மாதம் தான் ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை திருப்பூரில் பாலியஸ்டர் துணிகளின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது உலக அளவில் பாலியஸ்டர் ஆடைகளின் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா உள்ளிட்ட நாடுகளுக்கு 890 ஆயிரம் டன் பாலியஸ்டர் துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகத்திலேயே வியட்நாம், சைனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் அதிகமாக பாலியஸ்டர் துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி பாலியஸ்டர் ஏற்றுமதியில் வியட்நாம் முதல் இடத்திலும், சைனா 2-ம் இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி திருப்பூரை, இந்தியாவின் பாலிெயஸ்டர் சந்தையாக மாற்ற வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் வியட்நாமை பின்னுக்குத்தள்ளி, பாலியஸ்டர் ஏற்றுமதியில் இந்தியாவும், திருப்பூரும் முதலிடத்தை எட்டி பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.