பார் ஊழியரை கொலை செய்தவர் கைது

திருப்பூரில் மதுபோதையில் பார் ஊழியரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பனியன் கம்பெனி டெய்லரை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-15 05:54 GMT

திருப்பூரில் பார் உரிமையாளரை கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). டாஸ்மாக் பார் ஊழியர். இவர் கடந்த ஜூன் மாதம் வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார்த்திகேயனுடன் தங்கி இருந்த நபர், கார்த்திகேயனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா, ராஜேந்திர பிரசாத், தங்கவேல் மற்றும் அம்சத் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணையில் கார்த்திகேயனை கொலை செய்தவர் அவருடன் தங்கி இருந்த புதுக்கோட்டை மாவட்டம் வலங்குடி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 45) என தெரியவந்தது.

இவர் திருப்பூரில் வீரபாண்டி பகுதியில் தங்கி பணி நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்ததும், சம்பவத்தன்று கார்த்திகேயனுடன் அவரது அறையில் இருவரும் மது அருந்தி கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் கார்த்திகேயனை, கலைச்செல்வன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கலைச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.

Similar News