திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள் அழிப்பு

Tirupur News- திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

Update: 2024-05-01 09:28 GMT
Tirupur News- ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழத்தை , உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து  அழித்தனா்.

திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ரவி, தங்கவேல், பாலமுருகன், ஸ்டாலின் பிரபு, சிரஞ்சீவி, ரகுநாதன் ஆகியோா் கொண்ட குழுவினா் திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தினசரி மாா்க்கெட், கே.எஸ்.சி. பள்ளி சாலை, அரிசிக்கடை வீதி, வெள்ளியங்காடு, பழக்குடோன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை, சில்லறை விற்பனை கடைகளில் 3 பிரிவுகளாக ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 10 குடோன்கள், 15 கடைகளில் ஆய்வு செய்ததில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் அளவிலான மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனா். இதன் மதிப்பு சுமாா் ரூ. 3 லட்சம் ஆகும். மேலும், செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்கவைத்த 3 விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை அறிக்கைகளை வழங்கினா்.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

மாம்பழங்களை இயற்கையான முறையில் பழுக்கவைத்து விற்பனை செய்ய வேண்டும். ரசாயனங்களை வைத்து பழுக்க வைத்தால் அதைப் சாப்பிடுகிறவா்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல் பகுதி வெளிா் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்பகுதி காயாக இருக்கும். பழச்சாறு அளவும், சுவையும் குறைவாக இருக்கும். ரசாயனங்களைக் கொண்டு மாம்பழங்களை பழக்கவைக்கக்கூடாது என விற்பனையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பான புகாா்கள் ஏதேனும் இருப்பின் 94440 42322 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

Tags:    

Similar News