திருநெல்வேலி மாவட்டம் : தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர் களுக்கு யோகா பயிற்சி

காக்கிச்சட்டை அணியும் போதே நிதானமும், சகிப்புத்தன்மையும் வந்துவிட வேண்டும். குற்றவாளியாக இருந்தாலும் அவர்களிடம் சட்டரீதியாக அணுகவேண்டும்.உணர்ச்சி வசப்பட்டு எந்த செயலிலும் இறங்க கூடாது- எஸ்பி. மணிவண்ணன் அறிவுரை

Update: 2021-07-10 08:16 GMT


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கான யோகா பயிற்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

யோகா பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  பேசியதாவது:

காக்கிச்சட்டை அணியும் போதே நிதானமும், சகிப்புத்தன்மையும் வந்துவிட வேண்டும். பிரச்னைக்காக செல்லுமிடத்தில் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் சட்டரீதியாக அணுகுங்கள். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்த செயலிலும் இறங்க கூடாது. காவல்துறை என்பது கட்டுப்பாடான குடும்பம், அதன் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.

இதனால் மன உளைச்சல், குடும்பத்தில் பிரச்னை, வேலையில் பொறுப்பின்மை இவையெல்லாம் ஏற்படலாம்.  நீங்கள் கூடாநட்பை  தவிர்ப்பது நல்லது. இந்த வேலைக்கு  ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருப்போம். எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த வாய்ப்பை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். அதனால் இந்த வேலையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியில், பொறியியல் படிப்பு படித்தவர்கள், மாதம்  இருபதாயிரம் ரூபாய் ஊதியத்துக்காக வேலை தேடி  கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்தப்பணிக்காக  தங்குவதற்கு  வீடு உள்பட பல்வேறு சலுகைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.  பணிக்கு செல்லும் இடத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் அருகில் என்ன நடந்தாலும் அதனை கவனிக்கும் எண்ணம்  குறைந்து போய்கொண்டிருக்கிறது.

எனவே செல்போன் பயன்பாட்டைக் குறைத்துகொள்வது  உங்களுக்கும் பதவிக்கும்  நல்லது. வேலை மீதான ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளுங்கள். காவல்துறையினர் அனைவருமே கிடைக்கும் நேரத்தில் நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். கிடைக்கும் போதெல்லாம் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் அவர். இப்பயிற்சியில் 200 -க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News