திருநெல்வேலி: தசரா சப்பரங்கள் வீதி வீதியாக மக்கள் தரிசனத்திற்கு செல்ல வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

தசரா திருவிழாவில் அம்மன் கோவில் சப்பரங்கள் வீதி வீதியாக சென்று பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.

Update: 2021-10-14 08:43 GMT

வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பக்தர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை.

நெல்லை மாநகர் பகுதிகளில் தசரா திருவிழாவில் அம்மன் கோவில் சப்பரங்கள் வீதி வீதியாக சென்று பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், தச்சநல்லூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தசரா திருவிழா சிறப்பு வாய்ந்தவையாகும்.

இதை தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, நெல்லை டவுனில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது இந்த தசரா திருவிழாவையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டமாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அம்மன் கோவில் சப்பரங்கள் தெருத்தெருவாக சென்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். கோவிலுக்கு வரும் போது பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் 6 அடி சமூக இடைவெளியைப்  பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்கள் உடல் வெப்பநிலை அறிந்துகொண்டு பரிசோதித்த பின்புதான் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நெல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தசரா திருவிழாவின் போது பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்க அனுமதி கிடையாது உள்ளிட்டவை விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.  இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News